ரம்ஜான் பண்டிகை நெருங்குவதையொட்டி மாட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சந்தைக்கு வெளி மாநில மாடுகள் வரத்து அதிகமாக இருந்தாலும், கேரள வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் விற்பனை விறுவிறுப்புடன் இருந்தது.

பொள்ளாச்சியில் காந்தி மார்க்கெட்டில் உள்ள மாட்டு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆந்திர மற்றும் கர்நாடக மாநில பகுதியிலிருந்தும், விற்பனைக்காக மாடுகள் அதிகளவு கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் துவக்கத்தில் மாடுகள் வரத்து ஓரளவு இருந்ததுடன், கேரள வியாபாரிகள் வருகையும் அதிகரிப்பால், தொடர்ந்து மாடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானது.

அதன்பின் இந்த மாதம் துவக்கத்திலிருந்து புனித வெள்ளி, ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பால் மாடு வரத்து குறைவாக இருந்ததுடன், அந்நேரத்தில் கேரள வியாபாரிகள் வருகை மிகவும் குறைவால், விற்பனை மந்தமானது. இதனால், சில வாரங்களாக உள்ளூர் பகுதி வியாபாரிகளே, மாடுகளை குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர்.

ஆனால் நேற்று நடைபெற்ற சந்தை நாளின்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஓரளவு மாடுவரத்து இருந்தது.

ஆந்திர மற்றும் கர்நாடக மாநில பகுதியிலிருந்து வழக்கத்தைவிட சுமார் 2500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. வரும் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதால், நேற்று சந்தைக்கு கேரள வியாபாரிகள் வருகையும் அதிகமாக இருந்தது. இதனால் சில வாரத்திற்கு பிறகு மாடுகள் விற்பனை மீண்டும் விறுவிறுப்பானதுடன், அனைத்து ரக மாடுகளும் கூடுதல் விலைக்கு விற்பனையானது.

இதில் எருமை மாடு ரூ.50ஆயிரம் வரையிலும், பசுமாடு ரூ.38ஆயிரம் வரையிலும், காளை மாடு ரூ.55ஆயிரம் வரையிலும், ஆந்திர காளை மாடு ரூ.70 ஆயிரம் வரையிலும், கன்று குட்டி ரூ.20 ஆயிரத்துக்கும் கூடுதலாக விற்பனையானது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 1.70 கோடி வரையிலே வத்தகம் இருந்தது. ஆனால் நேற்று, ரூ.3 கோடி வரை வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ரம்ஜான் பண்டிகை நெருங்குவதையொட்டி மாட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் appeared first on Dinakaran.

Related Stories: