இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் சென்னை வருகை

மீனம்பாக்கம்: கடந்த பிப்ரவரி 2, 19 மற்றும் 23 ஆகிய 3 நாட்களில் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். இவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோது, இவர்களின் 3 விசைப் படகுகளையும் இலங்கை கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் சுற்றிவளைத்தது. அவர்களின் 3 விசைப் படகுகளை பறிமுதல் செய்து, ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்தநிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன் பின்னர் 11 மீனவர்களும் விமானம் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரக அதிகாரிகள் செய்தனர். ஆனால் அவர்களிடம் பாஸ்போர்ட் இல்லாததால், அனைவருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கி விமான டிக்கெட்டும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கொழும்பில் இருந்து நேற்றிரவு ஏர்இந்தியா பயணிகள் விமானத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களும் நேற்று நள்ளிரவு சென்னைக்கு வந்தனர். விமான நிலையத்தில் 11 மீனவர்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். இதன் பின்னர் அரசு ஏற்பாடு செய்த வாகனத்தின் மூலம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

The post இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் சென்னை வருகை appeared first on Dinakaran.

Related Stories: