குமாரபுரம், மார்ச் 22: தக்கலை அருகே புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. இந்த அரண்மனையை பார்ப்பதற்காக தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு அவர்கள் வரும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்காக கட்டண பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இயேசுதாஸ் என்பவர் கட்டணம் வசூலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கரளிக்கோணம் பகுதியை சேர்ந்த டிரைவர் நிஷாத்(37) என்பவர் பத்மநாபபுரம் அரண்மனைக்கு காரில் வந்தார். அங்கு தனது காரை பார்க்கிங் செய்தபோது, இயேசுதாஸ் கட்டணத்தை கூறி பணம் கேட்டுள்ளார். ஆனால் நிஷாத் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இயேசுதாஸ், நிஷாத்தை சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து நிஷாத் அளித்த புகாரின் பேரில் இயேசு தாஸ் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பார்க்கிங் கட்டணம் கேட்டதில் தகராறு கார் டிரைவர் மீது சரமாரி தாக்குதல் பத்மநாபபுரம் அரண்மனையில் பரபரப்பு appeared first on Dinakaran.
