வடமதுரை பிலாத்துவில் வறட்டாற்றில் பாலம் அமைத்து தர வேண்டும்: அனைத்து தரப்பினர் கோரிக்கை

வடமதுரை: வடமதுரை அருகே பிலாத்து பகுதியில் செல்லும் வறட்டாற்றில் பாலம் அமைத்து தர நடவடிக்ைக எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமதுரையில் எரியோடு நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறமாக பிரிந்து போகும் கிராம சாலையில் ரெட்டியபட்டி என்ற கிராமத்தை அடுத்து வறட்டாறு ஓடுகிறது. இப்பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த ஆற்றை கடந்து வடமதுரை வந்து அதன்பின் திண்டுக்கல் செல்கின்றனர். காரணம் கொம்பேறிபட்டியில் இருந்து தென்னம்பட்டி சுற்றி வடமதுரை வந்தால் 10 கிலோ மீட்டர் ஆகும்.

அதேசமயம் பிலாத்தில் இருந்து இந்த கிராம சாலையில் ஆற்றை கடந்து குறுக்கே ரெட்டியபட்டி வழியாக வடமதுரை நகர் பகுதியை எளிதில் 5 கிலோ மீட்டர் அளவில் அடையலாம். ஆனால் மழைக்காலங்களில் சுமார் 30 அடி ஆழமுள்ள ஆற்றில் இறங்கி ஏறி மறுகரையை அடைய இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் இந்த ஆற்றில் பாலம் கட்டி தர கோரி இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை பாலம் அமைத்து தரப்படவில்லை

இதுகுறித்து இப்பகுதி மக்கள், விவசாயிகள் கூறியதாவது: இந்த வறட்டாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் மழைக்காலங்களில் மிகவும் சிரமப்படுகிறோம். ஆற்றை கடக்க முடியாமல் தென்னம்பட்டி கிராமத்தை சுற்றி வடமதுரை நகர பகுதியை அடைகிறோம். இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பெரும்பாலும் தோட்டங்களில் வீடு அமைத்து குடியிருந்து வருகின்றனர். விவசாயிகளின் பிள்ளைகள் படிப்பதற்கு வடமதுரை, திண்டுக்கல் நகர் பகுதியில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். அப்படி செல்லும் போது மழைக்காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் ஓடினால் ஆற்றை கடக்க முடியாமல் தென்னம்பட்டி சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இந்த ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து கொடுத்தால் கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் வடமதுரை நகரை எளிதில் சென்றடைய முடியும்.

மேலும் தொலைவில் உள்ள கொம்பேறிபட்டி, மம்மானியூர், காடையனூர், மலைப்பட்டி, ஸ்ரீ ராமபுரம், கம்பிளியம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் இந்த பாலத்தின் வாழியாக குறைந்த தூரத்தில் வடமதுரை நகரை அடைய முடியும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

The post வடமதுரை பிலாத்துவில் வறட்டாற்றில் பாலம் அமைத்து தர வேண்டும்: அனைத்து தரப்பினர் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: