புதுக்கோட்டை,மார்ச் 8: புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அருணா தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டின் முதல்வர் திருநங்கைகளின் பொருளாதாரத்தினை முன்னேற்றிடும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமையன்று திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்றையதினம் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 50 திருநங்கைகள் கலந்துகொண்டு தங்களுக்கான வீட்டுமனைப் பட்டா, சிறுதொழில் கடன், ஆதார் திருத்தம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கிட வேண்டி பல்வேறு வகையான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மேலும் இம்மனுக்களின் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இம்முகாமில் திருநங்கைகளுக்கு ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சிக்கான ஆலோசனையும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடங்குவதற்கான கடனுதவிகள் குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டது.
எனவே தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இத்தகைய நலத்திட்டங்களை திருநங்கைகள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு, தங்களது வாழ்க்கையினை உயர்த்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர்ராஜராஜன், மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா, சமூக பாதுகாப்புத் திட்டம் தனி துணை ஆட்சியர் ஷோபா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
The post புதுக்கோட்டை மாவட்டம் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.
