தீட்சிதர்கள் மீதான குழந்தைத் திருமண வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு: தமிழ்நாடு காவல்துறை எதிர்ப்பு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலின் 2 தீட்சிதர்கள் மீது பதிவு செய்யப்பட்ட குழந்தைத் திருமண வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2022ம் ஆண்டு 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக அவரது தந்தை, உறவினர்களுக்கு எதிராக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சித்ரா சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சிறுமியின் தந்தை பானு சேகர் தீட்சிதர் மற்றும் மணமகனின் தந்தை சிவராம தீட்சிதர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி கடந்த 2004ம் ஆண்டு பிறந்தவர். அவருக்கு 2022ம் ஆண்டு திருமணம் நடைபெற்றபோது 18 வயதை நிறைவு பெற்றது. தற்போது இருவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; பாதிக்கப்பட்ட பெண் தற்போது வயது வந்தவர் என்பதாலும், வழக்கில் ஆர்வம் காட்டவில்லை என்பதற்காகவும் 2022ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கை ரத்து செய்ய முடியாது. சிதம்பரத்தில் குழந்தைத் திருமணங்கள் மீண்டும் மீண்டும் நடப்பதால், போலீசார் வழக்குத் தொடர்கின்றனர் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, எந்த அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது? என சிதம்பரம் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post தீட்சிதர்கள் மீதான குழந்தைத் திருமண வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு: தமிழ்நாடு காவல்துறை எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: