வைகுண்டம், பிப். 28: நத்தம் விஜயாசன பெருமாள் கோயில் மாசி திருவிழா 5ம் நாளில் கருடசேவை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். நவதிருப்பதிகளில் 2வது கோயிலான நத்தம் விஜயாசன பெருமாள் கோயிலில் மாசி திருவிழா, கடந்த பிப்.22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் 5ம் திருவிழாவை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 9 மணிக்கு திருமஞ்சனம், 10 மணிக்கு திருவாராதனம், மதியம் 12 மணிக்கு நாலாயிர திவ்யபிரபந்தம் சேவை நடந்தது.
பின்னர் பக்தர்களுக்கு சடாரி பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை, 7 மணிக்கு எம் இடர் கடிவான் வாகன குறட்டிற்கு எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் கருடவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 8.30 மணிக்கு கருட வாகனத்தில் புறப்பாடாகி மாடவீதி வழியாக வீதியுலா நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசித்தனர்.
The post மாசி திருவிழா 5ம் நாளை முன்னிட்டு நத்தம் கோயிலில் கருடசேவை appeared first on Dinakaran.
