செங்கல்பட்டு ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜிஎஸ்டி நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான கனரக வாகனங்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றாமல் தாறுமாறாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மேற்கண்ட பகுதிகளில் அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை தடுக்க மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கம் சிக்னல் அருகே ஜிஎஸ்டி நெடுஞ்சாலை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை-திருச்சி மார்க்கத்தில் சென்ற கனரக வாகனம், திடீரென எதிர்திசையில் வாகனங்கள் வரும் நிலையில் கடந்து சென்றது. இதனால் எதிர்வரும் வாகனங்களின் மீது இந்த கனரக வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழும் அபாயமும் ஏற்பட்டது. இதேபோல் பல்வேறு கனரக வாகனங்கள், செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையின் பல்வேறு பகுதிகளில் திடீர் திடீரென எதிர்திசையை நோக்கி வேகமாக கடந்து வருகின்றன. இதனால் அங்கு அடிக்கடி வாகன விபத்துகளும் உயிரிப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இதுபோன்று சாலை விதிகளை முறையாக பின்பற்றாத கனரக வாகனங்களை, அங்கு பணியில் உள்ள காவலர்களும் கண்டுகொள்வதில்லை. இதனால் செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் எந்நேரமும் திடீர் திடீரென எதிர்திசையில் முன்னோக்கி வரும் கனரக வாகனங்களை பார்த்து ஏராளமான வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர். இதையடுத்து அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இத்தகைய அவலநிலையை தடுக்க, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, விதிகளை மீறும் கனரக வாகன ஓட்டுநர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

The post செங்கல்பட்டு ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: