பள்ளி கல்வித்துறையின் கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு: அரசு அலுவலக உதவியாளர்கள் அறிவிப்பு

சென்னை: பள்ளி கல்வித்துறையின் கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த முதல்வர், துணை முதல்வருக்கு மார்ச் மாதம் அரசு அலுவலக உதவியாளர்கள் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துகிறார்கள். தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் சங்கம் தோன்றி 80ம் ஆண்டு அனுசரிப்பு கூட்டம் மாநில தலைவர் எஸ்.மதுரம் மற்றும் அகில இந்திய தலைவர் கே.கணேசன் தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் முனியப்பன் வரவேற்றார். மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் சோ.சங்கர் நன்றி கூறினார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கே.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:பள்ளி கல்வித்துறையில், சங்க கோரிக்கையை ஏற்று சுமார் 3 ஆயிரம் அடிப்படை பணியாளர்களை பணி நிரந்தரம் வழங்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வர், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மார்ச் 2வது வாரத்தில் சென்னையில் நன்றி அறிவிப்பு மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது.அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நீதிமன்ற ஆணையினை ஏற்று பூர்த்தி செய்திட வேண்டும். 12,524 ஊராட்சிகளில் பணியாளர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், தினக்கூலி, சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள், அனைத்து நான்காம் பிரிவு பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சரண் விடுவிப்பு விடுவிக்க வேண்டும். 7வது ஊதியக்குழு நிலுவைத்தொகை 21 மாத ஊதியத்தை வழங்க வேண்டும். பிசி, எம்பிசி ஆதித்திராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை உண்டு உறைவிட பள்ளிகளில் உள்ள விடுதிகளில் காலியாக உள்ள சமையலர்கள் , இரவு காவலர்கள் பணியிடங்களை நியமனம் செய்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

The post பள்ளி கல்வித்துறையின் கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு: அரசு அலுவலக உதவியாளர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: