தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம்

 

தேனி, பிப். 11: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். டிஆர்ஓ மகாலட்சுமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை கொண்ட 227 மனுக்களை அளித்தனர்.

இம்மனுக்கள் மீது உரிய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.6 ஆயிரத்து 353 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் 10 பேருக்கும், தாட்கோ சார்பில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் மூலம் பதிவு பெற்ற நல வாரிய உறுப்பினர்களுக்கு இறப்பு உதவித் தொகை தலா ரூ.25 ஆயிரம் வீதம் 2 பேருக்கும், திருமண உதவித் தொகை தலா ரூ.5 ஆயிரம் வீதம் 2 பேருக்கும், மகப்பேறு உதவித் தொகை ரூ.6 ஆயிரம் ஒருவருக்கும் கலெக்டர் வழங்கினார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1 லட்சத்து 1 ஆயிரத்து 800 மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 10 பேருக்கு கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனீப், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், தாட்கோ மேலாளர் சரளா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி, துணை ஆட்சியர்(பயிற்சி) டினுஅரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: