இலங்கை சிறைபிடித்த 34 பேரை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் அடையாள வேலைநிறுத்தம்: ஜன. 31ல் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 25ம் தேதி கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி பிப். 5ம் தேதி வரை மீனவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம், தலைவர் ஜேசுராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது.

மீனவர்களின் ஆலோசனைக்கு பிறகு ‘‘இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேரையும், பறிமுதல் செய்த 3 விசைப்படகுகளையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட காலமாக உள்ள மீனவர்களின் பிரச்னைக்கு இந்தியா, இலங்கை நாட்டு மீனவர்களும் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி இந்திய பாரம்பரிய எல்லையில் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும்’’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடந்தது. வரும் 31ம் தேதி காலை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது.

The post இலங்கை சிறைபிடித்த 34 பேரை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் அடையாள வேலைநிறுத்தம்: ஜன. 31ல் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: