தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணி, இனிப்பு, பட்டாசு கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், துணி, இனிப்பு, பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று விடுமுறை என்பதால் மேலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விற்பனையும் கனஜோராக நடைபெற்று வருகிறது. வருகின்ற 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள ஜவுளி கடை, இனிப்பு மற்றும் பட்டாசு கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் விற்பனை களைகட்டியுள்ளது. தி.நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளி கடைகளில் புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டுள்ளனர்.

புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை, போரூர், பாரிமுனை உள்ளிட்ட பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்துள்ளனர். இன்று விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். மேலும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடனும் மக்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளனர். மேலும் முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் இருந்து பாதுகாக்கவும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தற்காலிக கோபுரம் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

ஆவின் நிறுவனம் சார்பில், தீபாவளி பண்டிகைக்கு 6 சிறப்பு இனிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆவினில் இதன்படி, காஜு பிஸ்தா ரோல், நெய் பாதுஷா உள்ளிட்ட 6 சிறப்பு பலகாரங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. பண்டிகை கால ஸ்பெஷல் காம்போ பேக்குகளும் விற்பனைக்கு கிடைக்கின்றன. சென்னையில் உள்ளஇனிப்பு கடைகளிலும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இனிப்பு கடைகளில் காஜு பிஸ்தா ரோல், காஜு கட்லி, நெய் பாதுஷா, முந்திரி அல்வா, மிக்சர், முறுக்கு உள்ளிட்ட வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து நாளை, நாளை மறுநாள் மற்றும் 30ம் தேதி ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 4,900 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து 11,176 பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகளும் என ஒட்டு மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, நெல்லை, மதுரை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவை, ஈரோடு, ஊட்டி, வட மாநிலங்களான பெங்களூரு, ஜார்கண்ட், பீகார், டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் புறப்பட்டு செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணி, இனிப்பு, பட்டாசு கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: