×
Saravana Stores

சிறுமிக்கு பாலியல் தொல்லை:இசை ஆசிரியர் போக்சோவில் கைது

 

பூந்தமல்லி, அக்.21: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இசை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சாலிகிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் வசித்து வந்தவரின் வீட்டிற்குள், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தண்ணீர் புகுந்தது. இதனால், அந்த வீட்டில் குடியிருந்தவர்கள், அதே அடுக்குமாடி குடியிருப்பில் காலியாக இருக்கும் ஒரு அறையில் சென்று தங்குமாறு, அங்கு வசித்து வந்த இசை பயிற்சி ஆசிரியர் சுரேந்தர் (45) கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த குடும்பத்தினர் தங்களது 11 வயது மகளுடன் சேர்ந்து, காலியாக இருந்த அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சுரேந்தர் அங்கு வந்து சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து அவரது அறைக்கு சிறுமியை அழைத்து சென்று இசை கருவிகளை காண்பித்துள்ளார். இதனை தொடர்ந்து, சிறிது நேரத்தில் அழுதபடி பெற்றோரிடம் வந்த சிறுமி இசை ஆசிரியர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மதுரவாயலில் உள்ள விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரனை நடத்தியதில் சிறுமியிடம் இசை பயிற்சி ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சுரேந்தர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை:இசை ஆசிரியர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Pokso ,Poontamalli ,Bokso ,Water ,Saligram ,
× RELATED போதையில் ஆட்டோ சாகசம் தட்டிக்கேட்டவருக்கு வெட்டு