போதைப் பொருள் பறிமுதல்; ஆளுநர் பொய் அம்பலம்: தமிழ்நாடு போலீஸ் பறிமுதல் செய்த போதைப்பொருட்களின் விவரம் வெளியானது

சென்னை: தமிழ்நாடு காவல்துறை கடந்த 3 ஆண்டுகளில் ஒரு கிராம் அளவு கூட ரசாயனம் கலந்து தயாரிக்கப்படும் போதைப்பொருட்களை தமிழ்நாடு போலீஸ் கைப்பற்றவில்லை ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டிய நிலையில் தமிழ்நாடு போலீசார் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 300 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்திருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் அண்மையில் நடந்த போதை ஒழிப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர், தமிழ்நாட்டில் அதிக அளவு கஞ்சா பிடிக்கப்பட்டதாக மட்டுமே செய்திகள் வருவதாக குறிப்பிட்டார்.

ஆனால் செயற்கை மற்றும் ரசாயன போதை பொருட்களை தமிழ்நாடு போலீஸ் ஒரு கிராம் அளவு கூர் பிடிப்பதில்லை என குற்றம் சாட்டிய ஆளுநர் ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பினர் மட்டுமே டன் கணக்கில் செயற்கை போதை பொருட்களை பறிமுதல் செய்து வருவதாகவும் தெரிவித்தார். ஆளுநர் இந்த கருத்து பேசுபொருளாக நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்த செயற்கை போதை பொருட்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு 4.13 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் அதிகபட்சமாக கடந்த 2023ம் ஆண்டு 26.4 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் மெத்தகுலோன் என்ற போதை பொருள் 2023ம் ஆண்டு அதிகபட்சமாக 8.08 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு போலீஸ் ஒரு கிராம் செயற்கை போதை பொருளை கூட பறிமுதல் செய்யவில்லை என்ற ஆளுநரின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என்பது அம்பலமாகியுள்ளது.

2021ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை சுமார் 1 லட்சம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதிகபட்சமாக 2022ல் மட்டும் 76,540 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் எபெட்ரின் எனும் போதைப்பொருள் 2023ம் ஆண்டில் மட்டும் 118 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹெராயின் போதைப்பொருள் கடந்த 2021ம் ஆண்டு 21 கிலோ பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதன் பின்னர் அதன் புழக்கமே வெகுவாக கட்டுக்குள் கொண்டுவர பட்டது. அதே நேரத்தில் இந்த நாடு ஹசீஸ் என்ற போதைப்பொருள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் வரை மட்டுமே சுமார் 77.05கிலோ ஹசீஸ் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post போதைப் பொருள் பறிமுதல்; ஆளுநர் பொய் அம்பலம்: தமிழ்நாடு போலீஸ் பறிமுதல் செய்த போதைப்பொருட்களின் விவரம் வெளியானது appeared first on Dinakaran.

Related Stories: