அரசு பள்ளிக்கு சமையல் கூடம் கட்டித்தர வலியுறுத்தல்

திருவாடானை,அக்.15: திருவாடானை அருகே வெள்ளையபுரத்தில் செயல்படும் அரசு நடுநிலைப் பள்ளிக்கு சமையல் கூடம் கட்டி தரவேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே வெள்ளையபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது எட்டாம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு குடிநீர்,கழிப்பறை வசதி போன்றவைகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் சத்துணவு மாணவர்களுக்கு சமைப்பதற்கு சமையல் கூடம் இல்லாமல் ஆஸ்பெஸ்டால் ஆன கொட்டகையில் நான்கு புறமும் பாதுகாப்பின்றி சமையல் செய்யப்படுகிறது. அதுவும் பள்ளியின் உள்பகுதியில் உணவு தயாரிக்கப்படுவதால், பள்ளி முழுமையும் புகை மூட்டம் சூழ்ந்து விடுகிறது.

இதனால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதிலும் சிரமப்பட வேண்டி உள்ளது. எனவே புதிய சமையல் கூடம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து வெள்ளையபுரம் கிராமமக்கள் கூறுகையில், மற்ற அரசு பள்ளிகளை விட இந்த பள்ளியில் அதிக மாணவர்கள் தமிழ் வழியில் படித்து வருகின்றனர். தேவையான ஆசிரியர்களும் இந்த ஆண்டு நியமிக்கப்பட்டு சிறப்பாகவே உள்ளது. இருப்பினும் சத்துணவு கூடம் இல்லாமல் பள்ளியின் உள்பகுதியிலேயே சமைப்பதால் புகை சூழ்ந்து விடுகிறது. மேலும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே நிரந்தரமாக சத்துணவு சமையல் கூடம் கட்டித்தர அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post அரசு பள்ளிக்கு சமையல் கூடம் கட்டித்தர வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: