புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்கள் நாளையும், நாளை மறுதினமும் இயக்கம் வேலூர், திருப்பத்தூர், ஆற்காட்டில் இருந்து

வேலூர், அக்.15: புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி வேலூர் மண்டலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நாளையும், நாளை மறுதினமும் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி, பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். மேலும் பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான (புரட்டாசி) பவுர்ணமி நாளை (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் 17ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.38 மணிக்கு நிறைவடைகிறது.

இதையொட்டி திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வேலூரில் இருந்து 50 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 30 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 20 பஸ்கள் என்று மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் நாளை பிற்பகல் 2 மணி முதல் அந்தந்த பகுதிகளில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதலாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்கள் நாளையும், நாளை மறுதினமும் இயக்கம் வேலூர், திருப்பத்தூர், ஆற்காட்டில் இருந்து appeared first on Dinakaran.

Related Stories: