×

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழையால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பெரியகுளம்: நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மஞ்சளாற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, 57 அடி உயர மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணையில் 55 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெருமாள்மலை, பாலமலை, ஊத்து, பண்ணைக்காடு, வடகரைப்பாறை ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்போது, மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து இருக்கும்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், அணைக்கு நீர்வரத்து 150 கனஅடியில் இருந்து 200 கனஅடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 55 அடியில் இருந்து வருகிறது. இதனால், நேற்று அணைக்கு வந்த 200 கனஅடி நீர்வரத்தும் அப்படியே மஞ்சளாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, மஞ்சளாறு கரையோரப் பகுதிகளான தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, தும்மலபட்டி, வத்தலக்குண்டு, விருவீடு உள்ளிட்ட கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழையால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Manchalaru Dam ,Periyakulam ,Public Works Department ,Manjlaur ,Periyakulam, Theni district ,Dinakaran ,
× RELATED எலிவால் அருவியில் கொட்டுது தண்ணீர்