2026 சட்டமன்ற தேர்தல் குறித்து திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது

சென்னை: திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழுவை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அமைத்தார். குழுவில் திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இடம்பெற்றுள்ளனர்.

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவில் எடுக்க வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை செய்ய திமுக தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைப்பது, நிர்வாகிகளிடம் இருந்து வரும் புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழு இதுவரை திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணியுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ளது.

அமெரிக்கா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 8ம் தேதி திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான வெற்றி வியூகம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை வழங்கினார். இந்நிலையில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பு, அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு ஒருங்கிணைப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

திமுக சுற்றுச்சூழல் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, விளையாட்டு மேம்பாட்டு அணியினர் கலந்து கொண்டனர். அவர்களிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஐவர் குழுவினர் கருத்து கேட்டது. சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கியது. கட்சியின் செயல்பாடு, மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கட்சி சீரமைப்பு குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

The post 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: