அம்மையார்குப்பத்தில் ஆதிதிராவிடர் விடுதியில் முட்டை வழங்குவதில் முறைகேடு: மாணவர்கள் புகார்

ஆர்.கே.பேட்டை: அம்மையார்குப்பத்தில் செயல்படும் ஆதிதிராவிடர் விடுதியில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படுவதில்லை என்று மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் 66 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். விடுதி காப்பாளராக ஷாலின் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் வாரத்தில் ஒருமுறை மட்டுமே சொகுசு காரில் விடுதிக்கு வந்து சென்று விடுவதாகவும், விடுதியில் தனியார் ஆட்களை வைத்து உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மதிய உணவின்போது முட்டை வழங்கப்படுவதில்லை என்றும், அதற்கு மாறாக இரவில் வழங்கி வருவதாக மாணவர்கள் தெரிவித்தனர். அதற்குக் காரணம், மதிய உணவை 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாப்பிடுகின்றனர் ஆனால், இரவில் 10 முதல் 15 மாணவர்கள் மட்டுமே விடுதியில் தங்கி படித்து வருவதால், இரவில் குறைந்த முட்டைகளை போட்டு மதியம் அதிக முட்டைகளை போட்டுவிட்டதாக பொய்க்கணக்கு எழுதுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

விடுதி காப்பாளரிடம் புகார் தெரிவிக்கலாம் என்றாலும் அவர் வருவதில்லை என்றும், ஆதிதிராவிடர் நல தாசில்தாரிடம் புகார் செய்தால், நடவடிக்கை எடுப்பதில்லை என்று மாணவர்கள் வேதனை தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி, விடுதி மாணவர்களுக்கு சத்தாண உணவை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

The post அம்மையார்குப்பத்தில் ஆதிதிராவிடர் விடுதியில் முட்டை வழங்குவதில் முறைகேடு: மாணவர்கள் புகார் appeared first on Dinakaran.

Related Stories: