கொள்ளிடம் அருகே கீழமாத்தூர், குமாரக்குடி பகுதி பாசனத்திற்கு கிளை வாய்க்காலில் தண்ணீர் வந்தது

*நீர்வளத்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே கீழமாத்தூர் குமாரக்குடி ஆகிய கிராமங்களில் தினகரன் செய்தி எதிரொலியால் பாசனத்திற்கு கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கீழமாத்தூர், குமாரக்குடி கிராமங்கள் உள்ளது. இந்த இரண்டு கிராமங்களிலும் 500 ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடி நடைபெறுகிறது.

அப்பகுதியில் ராஜன் வாய்க்காலிலிருந்து கார் கண்ணி வாய்க்கால், பட்டா கண்ணி வாய்க்கால் ஆகிய கிளை வாய்க்கால்கள் பிரிந்து சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது. இந்த வாய்க்கால்கள் இரண்டு வருடங்களுக்கு மேலாக தூர் வாராமல் புதர் மண்டி கிடந்தது.

இதனால் ராஜன் வாய்க்காலில் தண்ணீர் அதிகம் வந்தும் கிளை வாய்க்கால்கள் மூலம் நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேராமல் இருந்ததால்.அப்பகுதியில் உள்ள நிலங்களில் விவசாயிகள் இதுவரை சம்பா நெற்பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலையில் இருந்து வந்தனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு செய்த மழையை வைத்து சிலர் உழவு செய்தனர்.

நேரடி விதைப்பு பணியை மேற்கொள்ள தயாராக இருந்தனர். ஆனால் சம்பா நேரடி விதைப்பு செய்து தண்ணீர் பாய்ச்சும் அளவுக்கு கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வந்து சேராமல் இருந்து வந்ததால் இதுவரை சம்பா நேரடி விதைப்பு செய்ய முடியாமல் தவிப்புக்குள்ளாகி வந்தனர். அப்பகுதியில் இரண்டு கிளை வாய்க்கால்களையும் தூர்வாரி ஆர்வடுத்த வேண்டு என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இது குறித்து, நேற்று தினகரனில் செய்தியாக வெளியாகி இருந்தது. இதையொட்டி நீர்வளத்த்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் பேரில் நேற்று அப்பகுதி கிளை வாய்க்கால்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் நேரடி விதைப்பு செய்துள்ள நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சார்பில் விவசாய சங்க செயலாளர் தனுஷ்கோடி கூறுகையில் உரிய நேரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க உதவியாக இருந்த தினகரன் இதழுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

இது குறித்து கொள்ளிடம் விவசாய சங்க செயலாளர் தனுஷ்கோடி கூறுகையில், கீழமாத்தூர்,குமார குடி பகுதியில்உழுது போடப்பட்ட நிலங்கள்,தண்ணீர் இல்லாமல் சம்பா நேரடி விதைப்பு செய்ய முடியாமல் வெறுமையாக கிடக்கின்றன.

இந்த பாசன வாய்க்கால்களை மட்டுமே நம்பி தான் இப்பகுதியில் 500 ஏக்கர் நிலங்கல் இருந்து வருகின்றன. எனவே அதிகாரிகள் இனிமேலாவது நேரடியாக சென்று பார்வையிட்டு உடனடியாக போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள பாசன கிளை வாய்க்கால்களை தூர்வாரி ஆழ்படுத்தி சம்பா சாகுபடி செய்யும் அளவுக்கு தண்ணீர் பாசனத்திற்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post கொள்ளிடம் அருகே கீழமாத்தூர், குமாரக்குடி பகுதி பாசனத்திற்கு கிளை வாய்க்காலில் தண்ணீர் வந்தது appeared first on Dinakaran.

Related Stories: