வக்பு மசோதா ஆய்வு குழுவுக்கு 1.2 கோடி இமெயில்கள்: கருத்துகள் குவிகிறது

புதுடெல்லி: வக்பு சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு இதுவரை இ மெயிலில் 1.2 கோடி கடிதங்கள் வந்துள்ளன என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. வக்பு வாரிய சட்டத்தில் ஒன்றிய பாஜ அரசு பல்வேறு திருத்தங்களை செய்துள்ளது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா கடந்த மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டத்தை ஆய்வு செய்வதற்காக பாஜ எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டு குழுவை(ஜேபிசி) அரசு அமைத்துள்ளது. இந்த மசோதா குறித்து பொதுமக்கள், பொதுநல அமைப்புகள்,நிபுணர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என ஜேபிசி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகையில், ‘‘வக்பு சட்ட திருத்த மசோதா பற்றி நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இமெயிலில் 1.2 கோடி கடிதங்கள் வந்துள்ளன.

மேலும் 75 ஆயிரம் ஆவணங்களும் வந்துள்ளன. ஏராளமான கடிதங்கள்,ஆவணங்கள் வருவதால் கூடுதலாக 15 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜேபிசி குழு வரும் 26ம் தேதியில் இருந்து மும்பை,அகமதாபாத்,ஐதராபாத்,சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு சென்று வக்பு வாரிய உறுப்பினர்கள்,அரசு அதிகாரிகள்,சட்ட நிபுணர்கள் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்ய உள்ளது’’ என்றன.

The post வக்பு மசோதா ஆய்வு குழுவுக்கு 1.2 கோடி இமெயில்கள்: கருத்துகள் குவிகிறது appeared first on Dinakaran.

Related Stories: