பிரதமரின் 3வது ஆட்சிகால முதல் 100 நாட்களில் வளர்ச்சியடைந்த நாட்டுக்கான அடித்தளம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சிகாலத்தின் முதல் 100 நாட்களில் வளர்ச்சியடைந்த நாட்டுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சியின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில், பல்வேறு ஒன்றிய அமைச்சகங்கள் டெல்லியில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், ‘பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சி காலத்தில் முதல் 100 நாட்கள் கடந்துள்ளது. இது வரும் 2047ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதற்கான வலிமையான அடித்தளமாகும்.

மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்றது என்பது மூன்று மடங்கு உத்வேகத்தை கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதேவேகத்தில் தான் பாஜகவும் செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளுக்கும் ரூ.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள், பெண்கள், மாணவ மாணவிகள், தொழிலாளர்கள் என்று அனைவரும் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டை பொருத்தமட்டில் வளர்ச்சிக்காக முதல் நூறு நாட்களில் ரூ.15 லட்சம் கோடி நிதி ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டுக்கு இரண்டு வந்தே பாரத் ரயில் இந்த நூறு நாட்களில் பிரதமர் மோடி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே தமிழ்நாட்டில் ஏழு வந்தே பாரத் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி கப்பல் துறைமுகத்தில் துறைமுகம் மேம்பாட்டுக்காக ஏழாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை பணிக்கு மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

The post பிரதமரின் 3வது ஆட்சிகால முதல் 100 நாட்களில் வளர்ச்சியடைந்த நாட்டுக்கான அடித்தளம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: