×

முத்துச்சாமிபுரம் – அழகாபுரி சாலையில் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு


குளத்தூர்: மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முத்துச்சாமிபுரம் -அழகாபுரி சாலையில் ரூ.80 லட்சத்தில் புதிய பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட சாலைகள், பாலங்கள், தடுப்பு சுவர்கள் சீரமைக்கும் பணிகள், கடந்த 7 மாதங்களாக நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட கனமழையில் நெடுஞ்சாலைகள், பாலங்கள், பாதுகாப்பு தடுப்பு சுவர்கள் என பெருமளவு சேதங்கள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் நாகலாபுரம் அருகே உள்ள முத்துச்சாமிபுரம்- அழகாபுரி பகுதியில் பாலம் சிதிலமடைந்து சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சிதிலமடைந்த பாலத்தை ஆய்வு மேற்கொண்ட விளாத்திகுளம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவிக் கோட்டப்பொறியாளர்(நெடுஞ்சாலை) ராஜபாண்டி, இளநிலை பொறியாளர் சார்லஸ்பிரேம்குமார் ஆகியோர் மழை வெள்ள பாதிப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் ரூ.80 லட்சத்தில் பாலத்திற்கான டெண்டர் விடப்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணிகள் துவக்கப்பட்டு பாலம் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது போக்குவரத்து பயண்பாட்டிற்கு விடப்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தால் சிதிலமடைந்த பாலம் துரித கதியில் புதியதாக அமைக்கப்பட்டதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post முத்துச்சாமிபுரம் – அழகாபுரி சாலையில் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Muthuchamipuram ,Ahakhapuri Road ,Kulathur ,Muthuchamipuram-Akhhapuri road ,Northeast Monsoon ,Highway Department ,Dinakaran ,
× RELATED குளத்தூர் குழந்தை விநாயகர் கோயிலில் உழவார பணிகள்