குருவாயூர் கோயிலில் நேற்று ஒரே நாளில் 334 ஜோடிகளுக்கு திருமணம்: எங்கு திரும்பினாலும் மணமக்கள்

திருவனந்தபுரம்: குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் நேற்று ஒரேநாளில் 334 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதனால் குருவாயூர் நகரமே ஸ்தம்பித்தது. நேற்று குருவாயூரில் எங்கு பார்த்தாலும் திருமண ஜோடிகள் தான் காணப்பட்டனர். கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் குருவாயூர் கிருஷ்ணன் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு தரிசனத்திற்காக பக்தர்கள் தினமும் வருகின்றனர்.

கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி குருவாயூர் கோயிலில் 248 திருமணங்கள் நடந்தன. இதுதான் இதுவரை அதிகபட்ச சாதனையாக இருந்தது. ஆனால் நேற்று இந்த சாதனை முறியடிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் குருவாயூர் கிருஷ்ணனின் சன்னதி முன் 334 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே செப்டம்பர் 8ம் தேதியான நேற்று கேரளாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணத்திற்கு முன்பதிவு செய்யத் தொடங்கினர்.

நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கடந்த மாதமே திருமண ஜோடிகளின் எண்ணிக்கை 300ஐ கடந்தது. நேற்று முன்தினம் இரவு வரை 350க்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டன. இதனால் திருமணத்தை நடத்துவதற்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த குருவாயூர் தேவசம் போர்டு தீர்மானித்தது. வழக்கமாக முகூர்த்த நாட்களில் அதிகாலை 5 மணி முதல் தான் திருமண சடங்குகள் தொடங்கும். ஆனால் நேற்று அதிகாலை 4 மணி முதலே சடங்குகள் தொடங்கின.

திருமணத்தை நடத்துவதற்கு கூடுதல் புரோகிதர்கள் நியமிக்கப்பட்டனர். கோயில் வளாகத்திற்குள் 6 மணமேடைகள் அமைக்கப்பட்டன. உடனுக்குடன் திருமணத்தை நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. காலை 8 மணிக்குள்ளேயே 186 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி முடிக்கப்பட்டது. ஒவ்வொரு ஜோடிக்கும் உறவினர்கள் போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் உள்பட 24 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நண்பகல் 12 மணிக்குள் அனைத்து திருமணங்களும் நடத்தி முடிக்கப்பட்டன.

334 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடந்ததால் குருவாயூர் கோயில் நகரமே நேற்று ஸ்தம்பித்து காணப்பட்டது. குருவாயூரில் நேற்று எங்கு பார்த்தாலும் திருமண ஜோடிகள் தான் காணப்பட்டனர். மணமக்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் குருவாயூர் முழுவதும் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. லாட்ஜுகள், ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்த போதிலும் பக்தர்களைக் கட்டுப்படுத்த போலீசார் சிரமப்பட்டனர்.

The post குருவாயூர் கோயிலில் நேற்று ஒரே நாளில் 334 ஜோடிகளுக்கு திருமணம்: எங்கு திரும்பினாலும் மணமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: