சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மாவட்ட வாரியாக அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களை பாதுகாத்து உரிய மனநல மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்க உத்தரவிட கோரி நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கே.வி.ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு உப்பு ஏற்றி செல்லும் லாரிகள் மூலம் வெளிமாநிலத்தில் இருந்து பலர் வருகின்றனர். இதில் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டு உணவு, உடைகள் இல்லாமல் சாலைகளில் சுற்றி திரிகிறார்கள்.

அவர்களால் பொதுமக்களும் அவ்வப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறார்கள். சாலைகளில் ஆதரவின்றி சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுக்காக்க கடந்த 2009ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை வழங்கியது. அதன்படி, அவர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மீட்டு, உரிய சிகிச்சை அளித்து அவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை வேண்டும். ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி வேதராண்யம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட நிர்வாகங்கள் மீட்டு, மனநல சிகிச்சைகளை அளிப்பதில்லை’ என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் காசிநாதபாரதி ஆஜராகி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை, அரசு மருத்துவனை நிர்வாகத்திற்கு மனு அளித்தும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை’ என்றார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க மாவட்ட வாரியாக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

The post சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மாவட்ட வாரியாக அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: