செபி தலைவர் மாதவி புச்சுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு திட்டம்!!

மும்பை :செபி தலைவர் மாதவி புச்சுக்கு எதிரான முறைகேடு புகார்கள் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணையை தொடங்கி உள்ளது. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை ஒழுங்குமுறை வாரியம் செபிதலைவராக பணியாற்றி வரும் மாதபி புரி புச் மீது, ஹிண்டன்பர்க் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தது. அதில், தொழிலதிபர் அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி புரிபுச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டியது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை செபி தலைவர் மறுத்தார்.

ஹிண்டன்பர்க் முன்வைத்த இந்த குற்றச்சாட்டின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு குற்றச்சாட்டு மாதபி புரி மீது எழுந்துள்ளது. அதாவது, மாதபி புரி விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியது. 2017-ம் ஆண்டு முதல் இதுவரையில் அவர் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தது. எனினும் காங்கிரஸ் கட்சி முன்வைத்த இந்த குற்றச்சாட்டுக்கு மாதபி புச்தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில் மாதபி புரி புச் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி மும்பையிலுள்ள செபி தலைமையகம் முன்பு 200-க்கும் மேற்பட்ட செபி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2 மணி நேரத்துக்கும் மேல் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் அவர்கள் கலைந்து சென்று தங்களது வழக்கமான பணிகளைத் தொடங்கினர்.

இதனிடையே, செபி தலைவர் மாதவி புச்சுக்கு எதிரான முறைகேடு புகார்கள் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணையை தொடங்கி உள்ளது. செபி தலைவர் மாதவி புச்சுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு திட்டம் வகுத்துள்ளது. செபி தலைவர் மாதவி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post செபி தலைவர் மாதவி புச்சுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு திட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: