நிரந்தர தீர்வு என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஆழமாக பாதிக்கும் கவலைக்குரிய விஷயத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதித்து வருகிறது. தமிழகத்தின் புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் (பதிவு எண்: IND-TN-08-MM-1418) இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளது. இந்தப் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள் தமிழக மீனவர்களுக்கு பல தலைமுறைகளாக வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது. இருப்பினும் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. இது தமிழக மீனவர் சமூகத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 21-07-2024 அன்று IND-TN-12-MM-5900 என்ற பதிவெண் கொண்ட படகில் மீன் பிடித்து கொண்டிருந்த போது 12 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 03-09-2024 அன்று 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இத்தகைய நடவடிக்கை ஏற்கனவே துயரத்தில் உள்ள மீனவ குடும்பங்களை மிகவும் வேதனைக்கு ஆளாக்கியது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும். எனவே, இலங்கை வசம் உள்ள மீன்பிடிப் படகுகளை விடுவிக்க வேண்டும். மீனவர்கள் தாயகத்திற்கு திரும்பி அழைத்து வர வேண்டும். மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.