தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக அரசுப் பேருந்துகளில் நேற்று ஒரே நாளில் 35,140 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு: போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக அரசுப் பேருந்துகளில் நேற்று ஒரே நாளில் 35,140 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். அரசு பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீண்ட தூரம் செல்லக்கூடிய விரைவு பஸ்களில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதி போன்றவை இருப்பதால் அதிகளவில் பயணிக்க தொடங்கி உள்ளனர். அரசு விரைவு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் நடைமுறையும் உள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளதால், தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் கடந்த 1, 2-ந் தேதிகளில் முன்பதிவு செய்தனர்.

அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்காக முன்பதிவு தொடங்கியது. அரசு பஸ்களில் பயணம் செய்ய நேற்று ஒரே நாளில் 35,140 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு 2018 ஜன.12ல் அதிகபட்சமாக 32,910 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், தற்போது அதை விட அதிக பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நிரம்பி விட்டன. அதே போல பண்டிகை முடிந்து நவம்பர் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வருவதற்கும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. 1,500 பஸ்களுக்கு முதல் கட்டமாக முன்பதிவு நடந்து வருகிறது. இது தவிர வழக்கம் போல சிறப்பு பஸ்களும் அறிவிக்கப்பட உள்ளது.

The post தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக அரசுப் பேருந்துகளில் நேற்று ஒரே நாளில் 35,140 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு: போக்குவரத்துத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: