சதுர்த்தி விழாவுக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதலை கடைபிடிக்க வேண்டும் 10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் இருக்க கூடாது

*நாகை கலெக்டர் அறிவுறுத்தல்

நாகப்பட்டினம் : மாசுகட்டுப்பாட்டு வாரியம் அளித்து வழிகாட்டுதலின்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் விநாயகர் சிலைளை கரைக்க வேண்டும். 10 அடி உயரத்திற்கு மேல் விநாயகர் சிலை இருக்க கூடாது என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

இதற்கு குறிப்பிடப்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கவும் வேண்டும். மாசுகட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள வழிகாட்டுதலின்படி விதிமுறைகளை பின்பற்றி சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் களிமண்ணால் மட்டும் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் வேதிப்பொருட்கள் கொண்டு செய்யப்பட்டிருக்கக் கூடாது. பந்தல் அல்லது கட்டமைப்புகள் அமைக்கும்போது எளிதில் தீப்பிடிக்காத அளவிற்கும் மற்றும் பொதுமக்கள் உள்ளே செல்வதற்கும், வெளியேறுவதற்கும் போதுமான வகையில் அமைக்கப்பட வேண்டும். அவசர காலத்திற்கு தேவையான மருத்துவ வசதி மற்றும் தீயணைப்பதற்கு உரிய உபகரணங்களை விழா அமைப்பாளர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வழிபாட்டிற்கு வைக்கப்படும் விநாயகர் சிலையின் உயரம் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மேல இருக்க கூடாது. விநாயர் சிலைகளை பிற மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் அமைக்கக் கூடாது. விநாயகர் சிலை நிறுவிய பின்னர் ஊரவலம் செல்லும் ஒலிப்பெருக்கி, பூஜை நேரத்தில் காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. பெட்டி வடிவ ஒலிப்பெருக்கி மட்டும் பயன்படுத்த வேண்டும்.

எந்த இசை நிகழ்ச்சிகளும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு வரையறுக்கப்பட்ட ஒலி அளவிற்கு அதிகமாக இருக்கக் கூடாது. விநாயகர் சிலைகள் அமைக்கப்படும் இடங்கள், ஊர்வல வழித்தடங்கள் மற்றும் சிலைக் கரைப்பு இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். வழிபாட்டுக் குழுவினர்கள் விநாயகர் சிலை வைக்கும் இடங்களில் மின் திருட்டு போன்ற எந்தவித சட்ட விரோதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது.

வழிபாட்டுக் குழுவினர்கள் விநாயகர் சிலை அமைக்கும் இடங்களில் எவ்வித அரசியல் கட்சியை சார்ந்தவர்களின் படங்கள் மற்றும் மதம் சம்மந்தப்பட்ட தலைவர்களின் கட் அவுட்கள் வைக்கக் கூடாது. விநாயர் சிலை இருக்கும் இடத்தில் 24 மணி நேரமும் 2 நபர்களை பாதுகாப்பிற்காக விழா அமைப்பாளர;கள் நியமிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட இடத்தில் வெளிச்சத்திற்கு விளக்கு வசதி செய்ய வேண்டும்.

மின்சாரம் தடைபட்டால் ஜெனரேட்டர் வசதி செய்திருக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின் போது பிற மதங்களை சேர்ந்த மக்கள் உணர்வை புண்படு;த்தும் கோஷங்களை எழுப்பக் கூடாது. பொது அமைதிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு வருவாய் துறை, காவல் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமம் ஆகியோரால் வழங்கப்படும் நெறிமுறைகளை அமைப்பாளர்கள் பின்பற்ற வேண்டும்.

பந்தலில் அமைக்கப்பட்ட மின்சாதனப் பொருட்கள் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களால் அடையாளம் காணப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்கப்பட வேண்டும். பொது இடங்களில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அச்சிலைகள் வைக்கப்பட்ட 5 நாட்களுக்குள் உரிய இடத்தில் கரைக்கப்பட வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை வரும் 30ம் தேதிக்குள் செய்யப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மினிலாரி, டிராக்டர் மூலம் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். மாட்டு வண்டி, 3 சக்கர வாகனங்களில் கொண்டு செல்ல அனுமதி இல்லை. விநாயகர் சிலைகள் ஊர்வலமானது அனுமதிக்கப்பட்ட தினங்களில் 12 மணி நேரத்திற்கு முன்னதாகவும், காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாகவும் வாகனங்களை பயன்படுத்தியும் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடத்;திலேயே கரைக்க வேண்டும்.

மசூதி மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் வழியாக கடப்பதை தவிர;ப்பதற்கு காவல் துறையினரால் வரையறுக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே செல்ல வேண்டும். சிலைகளை எடுத்துச்செல்லுமம் போது ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post சதுர்த்தி விழாவுக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதலை கடைபிடிக்க வேண்டும் 10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் இருக்க கூடாது appeared first on Dinakaran.

Related Stories: