தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் முட்டுக்கட்டை போடுவதை ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

சென்னை: தமிழக பல்கலைக் கழகங்களில், துணை வேந்தர்கள் நியமனத்தில் முட்டுக்கட்டை போடுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பல்கலைக்கு கடந்த ஓராண்டு காலமாக துணைவேந்தர் பதவி நியமிக்க முடியாமல் தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

இதனால் 55,000 கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் கடந்த ஏப்ரல் 2023ல் தேர்வான பிறகு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் இருக்கிறது. இப் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்க 3 உறுப்பினர் தேடுதல் குழுவை மாநில அரசு நியமித்தது. அதற்கு போட்டியாக தமிழக ஆளுநர் 4 உறுப்பினர் கொண்ட தேடுதல் குழுவை நியமித்திருக்கிறார். பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்யும் நடைமுறையை தமிழக ஆளுநர் தொடர்ந்து முடக்கி வருவதால் பல பல்கலைகளில் அரசு துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

மேற்குவங்க அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தற்போது பிறப்பித்திருக்கும் உத்தரவு தமிழ்நாட்டிற்கும் பொருந்தும். எனவே துணைவேந்தர்கள் நியமனத்தில் தலையிடுவதை தமிழக ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொண்டு, தமிழக அரசோடு இணங்கி பணியாற்ற முன்வர வேண்டும். அப்படி இல்லையெனில் அதற்கான விளைவுகளை மேற்குவங்க ஆளுநர் சந்தித்ததைப் போல தமிழக ஆளுநரும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

The post தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் முட்டுக்கட்டை போடுவதை ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: செல்வப்பெருந்தகை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: