வியக்க வைக்கும் முருங்கை!

நன்றி குங்குமம் தோழி

நம் முன்னோர்கள் இயற்கையில் கிடைக்கும் தாவர வகைகளை மருந்தாகப் பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு பயன்படுத்தப்பட்ட தாவரங்களில் முருங்கையும் ஒன்றாகும். முருங்கைக் கீரையில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. பல நோய்களை குணப்படுத்தவும், வருமுன் காக்கவும் முருங்கைக்கீரை உதவுகிறது. வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்த்து வந்தால், வீட்டில் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம். முருங்கைக் கீரை 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களைக் குணப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடுகிறது. முருங்கைக் கீரையில் 90 வகையான சத்துகளும், 46 வகையான மருத்துவ குணமும் இருப்பதாக ஆய்வுக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

முருங்கையின் மூலம் கிடைக்கிற புரதமானது முட்டை, பால் மற்றும் இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதத்துக்கு இணையானது. மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. முருங்கைக்கீரை மட்டுமின்றி முருங்கை பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவதுண்டு. முருங்கைப்பூவை பொரியல் போல் செய்து சாப்பிடலாம். வேக வைத்த பாசிப்பருப்புடன் முருங்கைப்பூவையும், பொடியாக நறுக்கிய வெங்காயமும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது குழந்தையின்மைப் பிரச்னை தீர உதவும். கர்ப்பப்பை கோளாறுகளை சரி செய்யும்.

மாலைக்கண் தீர, ரத்தம் விருத்தியாக முருங்கைக்கீரையை வதக்கியோ, கூட்டு கீரையாக கடைந்து சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் வராமல் தடுக்கலாம். இரும்புச்சத்து மிகுதியாக உள்ளதாலும், வைட்டமின் ‘ஏ’ சத்து உள்ளதாலும் இவ்வாறு பயன்படுகிறது. கால்சியம், வைட்டமின் ‘பி’, ‘பி2’, ‘சி’ சத்துக்கள் மிகுதியாக உள்ளன. முருங்கைக் காயை எந்த வகையிலாவது சமைத்து தொடர்ந்து சாப்பிட சளி குறையும்.

முருங்கை இலையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியானது சருமத்தில் உள்ள தொற்றுக்கள், பாக்டீரியாவினால் உண்டாகும் பிரச்னைகள் போன்றவற்றிலிருந்து காப்பாற்ற உதவுகிறது. இது சிறுநீர்ப்பாதையில் ஏற்படுகின்ற தொற்றுக்களையும் போக்க உதவுகிறது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக் கீரைதான்.

– வத்சலா சதாசிவன், சென்னை.

The post வியக்க வைக்கும் முருங்கை! appeared first on Dinakaran.

Related Stories: