வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு: அமலாக்கத்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில்பாலாஜியை ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் விடுவிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி சார்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அன்றைய தினம் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ளதால் விசாரணையை வேறொரு நாளைக்கு தள்ளிவைக்க வேண்டுமென்று கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு: அமலாக்கத்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: