மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து கூடுதல் டிஜிபி பிரமோத் குமார் டிஜிபியாக பதவி உயர்வு: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக உள்ள பிரமோத் குமார், பண மோசடி வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்ததை அடுத்து, அவருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி மாநில உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரமோத்குமார். இவர் தமிழ்நாடு கேடரில் கடந்த 1989ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். இவர் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றி தற்போது கூடுதல் டிஜிபியாக உள்ளார். இவருடன் பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கடந்த 2020ம் ஆண்டு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

ஆனால் பிரமோத்குமார் மீது வழக்குகள் இருந்ததால் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதேநேரம் கடந்த 2012ம் ஆண்டு சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இதையடுத்து இவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த புதுடில்லி நிர்வாகத் தீர்ப்பாயம் கடந்த பிப்ரவரி 20ம் தேதி ஐபிஎஸ் அதிகாரியான பிரமோத்குமார் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களில் இருந்த அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் பிரமோத் குமார் விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கூடுதல் டிஜிபியாக உள்ள பிரமோத் குமாரை தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டார்.

The post மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து கூடுதல் டிஜிபி பிரமோத் குமார் டிஜிபியாக பதவி உயர்வு: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: