ஆபாச விளம்பரங்களுக்கு தடை கோரி வழக்கு ஒன்றிய அரசு, கூகுள் பதிலளிக்க நோட்டீஸ்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் ஒன்றிய அரசு மற்றும் கூகுள் நிறுவனம் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூகுள் இணையத்தில் ஆபாச வலைத்தளங்களுக்கான பரிந்துரைகள் வருவதற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், இணைய பயன்பாட்டாளர்கள் கூகுள் தேடுதலில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து சில தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பரத்தை பிரபலப்படுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது.

இதை சில தவறான நபர்கள் தவறாக பயன்படுத்தி ஆபாச இணையதளங்களுக்கான பரிந்துரைகளை வழங்கும் வகையில் விளம்பரப்படுத்துகின்றனர். இந்த ஆபாச புகைப்படங்கள் கொண்ட விளம்பரங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கூகுள் நிறுவனமும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகமும் இந்த வழக்கில் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post ஆபாச விளம்பரங்களுக்கு தடை கோரி வழக்கு ஒன்றிய அரசு, கூகுள் பதிலளிக்க நோட்டீஸ்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: