மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி: போலீஸ் விசாரணைக்கு அதிக மாத்திரை சாப்பிட்டு வந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை

குடியாத்தம், ஆக.6: குடியாத்தத்தில் போலீஸ் விசாரணைக்கு அதிக மாத்திரை சாப்பிட்டு வந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மசிகம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(38). அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரண்யா. இவர் திருப்பத்தூர் மாவட்டம், மாதனூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர் இந்நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதுகுறித்து இருவரும் தனித்தனியாக குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில் குடும்ப தகராறில் விரக்தியடைந்த ஆசிரியை சரண்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அதனடிப்படையில், போலீசார் நேற்று இருவரையும் விசாரணைக்காக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்தனர்.

அப்போது அங்கு வந்த ஆசிரியர் ஆனந்தன் சுமார் 30 மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதனை அறிந்த போலீசார் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து குடியாத்தம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஹரி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி: போலீஸ் விசாரணைக்கு அதிக மாத்திரை சாப்பிட்டு வந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: