தொம்புலிபாளையம் மாரியம்மன் கோயில் ஆடி திருவிழா இன்று துவங்குகிறது

தொண்டாமுத்தூர், ஆக. 4:கோவை ஆலாந்துறையை அடுத்த தொம்புலிபாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் 6ம் ஆண்டு ஆடி திருவிழா இன்று( 4ம் தேதி) துவங்குகிறது. அன்று காலை கணபதி ஹோமம்,கோமாதா பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து பஞ்ச வாத்யங்கள் முழங்க சாடிவயல் சென்று அம்மனுக்கு கம்பம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.6ம் தேதி காலை கோவை குற்றாலத்திற்கு தீர்த்தக்குடம் எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு தொடர்ந்து 12 மணிக்கு கம்பம் நடுதல் நடைபெறுகிறது. 7ம் தேதி முதல் அம்மனுக்கு அபிஷேகம்,ஆராதனைகள் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பூவோடு எடுத்து கம்பம் சுற்றி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின் 7 நாட்கள் இரவு தோறும் கலைநிகழ்ச்சிகளான பரதநாட்டியம்,ஒயிலாட்டம்,வள்ளி கும்மியாட்டம்,மலை வாழ் மக்களின் நடனம், ஆர்க்கெஸ்ட்ரா,நாடகம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.13ம் தேதி இரவு 10 மணிக்கு பம்பை,பஞ்ச வாத்யங்கள்,தாரை தப்படை முழங்க கரக ஆட்டத்துடன் வாணவேடிக்கையோடு பக்தர்கள் ஊர்வலமாக சக்தி கரகம் நொய்யல் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

14ம் தேதி காலை சக்தி கிரகம் நொய்யல் ஆற்றின் கரையில் இருந்து அம்மன் கோயிலை வந்தடையும் நிகழ்ச்சியும்,அம்மனுக்கு அமுது படைத்தல், அலங்காரம்,அபிஷேகம் பூஜைகள் தீபாராதனை நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணி அளவில் 101 பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 15ம் தேதி அம்மன் திருத்தேரில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16ம் தேதி மறுபூஜை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14 மற்றும் 15ம் தேதிகளில் மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியார் செய்து வருகின்றனர்.

The post தொம்புலிபாளையம் மாரியம்மன் கோயில் ஆடி திருவிழா இன்று துவங்குகிறது appeared first on Dinakaran.

Related Stories: