தமிழ்நாட்டுக்கு நீர் தர மறுக்கும் கர்நாடக அரசு மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து தண்ணீரை பெற்றுத்தர வேண்டும்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து தண்ணீர் பெற்று தர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரின் சிலைக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், எஸ்சி,எஸ்டி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார், பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், பி.வி.தமிழ்செல்வன், ஆர்.டி.ஐ.பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், முத்தழகன் மற்றும் நிர்வாகிகள் பா.சந்திரசேகர், ம.வே.மலையராஜா, சூளை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தன. காமராஜரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவரது ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட சாதனை திட்டங்கள் குறித்து 122 மாணவர்கள் மேடையில் பேசினர். இந்த நிகழ்வு Lincon Book of Recordsல் இடம் பெற்றது. பிறகு செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மனிதகுலம் உள்ளவரை காமராஜர் புகழ் நிலைத்து நிற்கும். கர்நாடக காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்தால், தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய இடத்தில் ஒன்றிய அரசுதான் உள்ளது. எனவே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டுக்கு நீர் தர மறுக்கும் கர்நாடக அரசு மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து தண்ணீரை பெற்றுத்தர வேண்டும்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: