மொத்தம் 63 பயணிகளும் நிலச்சரிவில் சிக்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சித்வான் மாவட்ட ஆட்சியர் இந்திரதேவ் யாதவ் கூறுகையில், ‘இரண்டு பேருந்துகளின் டிரைவர்கள் உட்பட 63 பேர் நிலச்சரிவில் சிக்கி திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்புப் பணிகள் தாமதமாகிறது. இருந்தும் தேசிய பேரிடர் மேலாண்மை படையுடன் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் இணைந்து பேருந்து மற்றும் இறந்த பயணிகளை மீட்கும் பணியில் களமிறங்கி உள்ளனர்’ என்று கூறினார். இந்த கோர சம்பவம் குறித்து நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால் வெளியிட்ட பதிவில், ‘நாராயண்கர்-முகலின் சாலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பெரும் வெள்ளம் காரணமாக பேருந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது.
இந்த விபத்தில் சிக்கிய பயணிகள் காணாமல் போன செய்தி கேட்டு மிகவும் வருத்தப்படுகிறேன். விபத்தில் சிக்கிய பயணிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது’ என்றார். மற்றொரு விபத்தில், அதே சாலையில் புட்வாலில் இருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர் மேக்நாத் என்பவர், நிலச்சரிவு காரணமாக பலத்த காயமடைந்தார். சித்வான் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அடுத்தடுத்த நிலச்சரிவு சம்பவங்களால், நேபாள காவல்துறை மற்றும் ஆயுதப்படை காவலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவேஷ் ரிமல் தெரிவித்தார். தற்ேபாது நிலச்சரிவு காரணமாக நாராயண்காட் – முகிலிங் சாலை போக்குவரத்து மூடப்பட்டது. அப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post இரண்டு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 63 பேர் பரிதாப பலி: திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சோகம் appeared first on Dinakaran.