தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி, 4வது மண்டலத்திற்கு உட்பட்ட சேனியம்மன் கோயில் தெருவில், கடந்த 7ம் தேதி 3ம் வகுப்பு மாணவன் கவுரிநாத்தை, தெருநாய் கடித்தது. இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மாநகராட்சி கால்நடை தலைமை மருத்துவ அலுவலர் கமால் உசேன் தலைமையில், 42வது வார்டுக்கு உட்பட்ட சேனியம்மன் கோயில் தெரு, திலகர் நகர் குடியிருப்பு, சுனாமி குடியிருப்பு, இரட்டை குழி தெரு, பொதுப்பணித்துறை குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது.

மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன், மாமன்ற உறுப்பினர் ரேணுகா ஆகியோர் முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் மகேஸ்வரன், பரத் ஆகியோர், ஊழியர்கள் உதவியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். மேலும் தடுப்பூசி செலுத்தியதற்கு அடையாளமாக நாய்கள் மீது வண்ணம் பூசப்பட்டது. பொதுமக்களும் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை அங்கு கொண்டு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுகுறித்து தலைமை கால்நடை மருத்துவர் கமால் உசேன் கூறுகையில், இந்த தடுப்பூசி தனியார் மருத்துவமனையில் செலுத்தினால் ரூ.300 ஆகும். மாநகராட்சி இலவசமாக இதை செலுத்தி வருகிறது. தெருநாய்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்படும்,’’ என்றார்.

The post தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: