ஆர்.எஸ்.மங்கலம் சாத்தமங்கலத்தில் மாடக்கோட்டை ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் 31ம் ஆண்டு வைகாசி உற்சவ திருவிழா: இன்று பூச்சொரிதல் நடக்கிறது

ஆர்.எஸ்.மங்கலம், மே 30: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் நம்பிக்கைக்குரிய வேண்டுதல்களை உடனே நிறைவேற்றும் தெய்வமாகவும், அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகவும் விளங்கும் சாத்தமங்கலம் மாடக்கோட்டை ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் 36ம் ஆண்டு வைகாசி உற்சவ விழா மற்றும் 72வது ஆண்டு விழா கடந்த வாரம் காப்புகட்டுதலுடன் துவங்கியது. முன்னதாக கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தன. பின்னர் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனிதநீர் மூலம் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கோயில் கொடி மரத்தில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கொடிமரம் மற்றும் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பின்னர்அங்கு வந்திருந்த பக்தர்கள் தங்களது கைகளில் காப்புகளை கட்டி கொண்டு விரதத்தை துவங்கினர்.

இவ்விழாவின் தொடர்ச்சியாக இன்று மே 30ம் தேதி சாத்தமங்கலம் விநாயகர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் மேளதாளத்துடன் பூத்தட்டு எடுத்து வந்து ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் பூச்செரிதல் விழா நடைபெற உள்ளது. நாளை மே 31ம் ேததி முக்கிய விழாவான பூக்குழி இறங்குதல் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பக்தர்கள் அலகு குத்தியும், பால் காவடி, பறவை காவடி, மயில் காவடி, இளநீர் காவடி, பன்னீர் காவடி உட்பட பல்வேறு விதமான காவடிகளை எடுத்து வந்தும் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துதல் நடைபெறும். நாளை மறுநாள் ஜூன் 1ம் தேதி கிடாவெட்டு விழாவுடன் இவ்விழா நிறைவடைய உள்ளது.

இந்நிகழ்வுகளில் உள்ளுர் பக்தர்கள் மட்டுமின்றி சிவகங்கை, சென்னை, திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்த்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வழக்கத்தை விட கூடுதலான பக்தர்கள் வருகை தர உள்ளதாக எதிர்பார்க்கப்படுவதால் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் டிரஸ்ட்டி கருப்பத்தேவர் மற்றும் அவரது மகனும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், சென்னை பெருநகர மாநகராட்சியின் நிதிநிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவருமான கே.கே.நகர் தனசேகரன் மற்றும் விழா கமிட்டியினர் மிக பிரமாண்டமாக செய்து வருகின்றனர்.

The post ஆர்.எஸ்.மங்கலம் சாத்தமங்கலத்தில் மாடக்கோட்டை ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் 31ம் ஆண்டு வைகாசி உற்சவ திருவிழா: இன்று பூச்சொரிதல் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: