ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பாஜகவினர் 2 பேர் கைது: ரேவண்ணா, பிரஜ்வல் மீது மேலும் ஒரு பாலியல் புகார்

பெங்களூர்: கர்நாடகாவில் பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட விவகாரத்தில் பாஜகவினர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடையதாக ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட விவகாரத்தில் லிக்கித் கவுடா, எலகுண்ட சேத்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான லிக்கித் கவுடாவும், எலகுண்ட சேத்தனும் கர்நாடக மாநில பாஜக பொதுச் செயலாளர் பிரீத்தம் கவுடாவின் நண்பர்களாவர். ஹாசன் சட்டமன்றத் தொகுதியில் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தவர் பிரீத்தம் கவுடா.

ஜேடிஎஸ் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் ஹாசன் காவல் நிலைய போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். ஆபாச வீடியோ விவகாரத்தில் தலைமறைவாக உள்ள காங்கிரஸ் நிர்வாகி நவீன் கவுடாவை போலீசார் தேடி வருகின்றனர். வெளிநாடு தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர சிபிஐ மற்றும் இன்டர்போல் மூலம் சிறப்பு புலனாய்வு குழு ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ரேவண்ணா, பிரஜ்வல் மீது மேலும் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது.

ரேவண்ணா, பிரஜ்வல் மீது மேலும் ஒரு புகார்

எச்.டி.ரேவண்ணாவும், அவரது மகன் பிரஜ்வலும் தனது தாயை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். வீடியோகால் மூலம் தன்னிடம் பேசிய பிரஜ்வல், ஆடைகளை களையச் சொல்லி மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்தார். பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

The post ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பாஜகவினர் 2 பேர் கைது: ரேவண்ணா, பிரஜ்வல் மீது மேலும் ஒரு பாலியல் புகார் appeared first on Dinakaran.

Related Stories: