×

வடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 7 பேர் கைது

 

வடலூர், மே 5: கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் தொடங்கிய சத்திய ஞானசபை உள்ளது. இங்குள்ள பெரு வெளியில் கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையத்திற்கான பணிகள் தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பணிகளை தொடங்கி வைத்தார். இதில், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

சத்திய ஞானசபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாம் தமிழர் கட்சி மற்றும் தெய்வ தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தெய்வத்தமிழர் பேரவை தலைவர் மணியரசன் ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர். ஆனால் போலீசார் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடக்க இருந்த சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கடலூர் செல்லங்குப்பத்தை சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோலன்(40), மகேஷ்குமார்(55), சாமிரவி(49), அன்பு தென்னரசு(60), ஜஸ்டின் பெனடிக்ராஜ்(46), சுஜின்(34), முத்துக்குமார்(37) ஆகிய 7 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். இதன் காரணமாக போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

The post வடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Naam Tamil Party ,Vadalur ,Cuddalore district ,Satya Gnanasabha ,Vallalar ,Vallalar International Center ,Peru ,Chief Minister of ,Tamil Nadu ,Naam Tamilar Party ,
× RELATED தடையை மீறி போராட்டம் அறிவிப்பு; நாம்...