அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ், தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப்படை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்துக்கும், வளாகத்தில் உள்ள பிற நீதிமன்றங்களுக்கும் இடையில் உள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும். மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு ஆண்டுக்கு ரூ.62 கோடி செலவிடும் நிலையில், உயர் நீதிமன்ற வளாகம் முழுவதற்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரின் கோரிக்கை மனு சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்புக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் குழு கூடி ஆய்வு செய்ய உள்ளது. அனைத்து நீதிமன்றங்களுக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பை வழங்குவது சாத்தியமற்றது. முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றங்களில் போதுமான பாதுகாப்பை உறுதி செய்யும்படியும், நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்து விசாரணையை ஜூலை 18க்கு தள்ளிவைத்தனர்.

The post அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: