வரிகள், பாடகர் குரல் சேர்ந்துதான் பாடல் உருவாகிறது பாடகர், பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆவது? இளையராஜா வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: வரிகள், பாடகர் குரல் சேர்ந்துதான் பாடல் உருவாகிறது. பாடல் ஆசிரியர், பாடகரும் அதற்கு உரிமை கோரினால் என்ன ஆகும் என சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாடல்கள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது. இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாக கடந்த 2019ல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.

இதனிடையே, படத்தின் பதிப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பிலும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இசையமைத்ததற்கு இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்துவிட்டதால் அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும். தயாரிப்பாளரிடம் இருந்து உரிமை பெற்றுள்ளதால், பாடல்கள் எக்கோ நிறுவனத்திற்கு சொந்தமாகி விட்டது என்று வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், இசையமைப்பு என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் பதிப்புரிமை சட்டம் இந்த வழக்கில் பொருந்தாது என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படி என்றால் பாடல் வரிகள், பாடகர் குரல் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும் என்று சரமாரி கேள்வி எழுப்பினர். பின்னர், வழக்கின் விசாரணையை ஜூன் 2வது வாரத்திற்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பாடல்கள் விற்பனை மூலம் இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் தெரிவித்தனர்.

* ஒரு பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?
* பாடல் வரிகள், பாடகர் குரல் அனைத்தும் சேர்ந்துதான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை.
* பாடல்கள் விற்பனை மூலம் வணிகரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம்?
* பாடலை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி எக்கோ நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இளையராஜாவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி.

The post வரிகள், பாடகர் குரல் சேர்ந்துதான் பாடல் உருவாகிறது பாடகர், பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆவது? இளையராஜா வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: