தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இன்றும் வெப்ப அலை வீசும்: இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை மற்றும் மேற்கு திசையின் காற்று மாறுபாடு ஆகிய காரணங்களால், கடந்த வாரம் இயல்பு நிலையை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் அளவு அதிகரித்தது. அதனால், ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச அளவாக 108 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவானது.

இந்நிலையில், நேற்று திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ விடப்பட்டது. அதற்கேற்ப, நேற்று காலையில் இருந்தே தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரிக்கத் தொடங்கியது. உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் அதிகரித்தது. நேற்று மதியம் 12 மணி அளவில் வேலூர், காஞ்சிபுரம், நாமக்கல், பொள்ளாச்சி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது.

பின்னர் படிப்படியாக உயர்ந்து இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. சென்னை, சிதம்பரம், காரைக்குடி, கடலூர் ஆகிய இடங்களில் மதியம் 111 டிகிரி அளவுக்கு வெப்பம் உணரப்பட்டது. அதிகபட்ச வெப்ப நிலையாக ஈரோடு, திருப்பத்தூர்,வேலூர், கரூர் பரமத்தியில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. 23 மாவட்டங்களில் சராசரியாக 102 டிகிரி வரை வெயில் அதிகரித்து இருந்தது. மதியத்துக்கு பிறகு உள் மாவட்டங்களில் காற்றில் 30-50% ஈரப்பதம் சேரத் தொடங்கியது. அதற்கு பிறகு 40-75 சதவீதம் ஈரப்பதம் இருந்தது. கடலோரப் பகுதியில் 50-85 சதவீதம் வரையில் ஈரப்பதம் இருந்தது. அதனால் சில இடங்களில் நேற்று மாலை லேசான மழை பெய்தது.

இந்நிலையில், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும். நாளை முதல் 30ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும். இன்று அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் அந்த பகுதிகளில் வெப்ப அலை வீசும். சமவெளிப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் 102முதல் 108 டிகிரி வரையும், இதர மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் 100 டிகிரி வரை இருக்கும். அத்துடன் நாளை முதல் 28ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 100 முதல் 106 டிகிரி வரை இருக்கும்.

* அதிக வெப்பம் நாட்டிலேயே சேலத்துக்கு 3ம் இடம்
நாட்டில் நேற்று அதிக வெப்பம் பதிவான இடங்களில் ஆந்திராவின் அனந்தபூர் முதல் இடம் பெற்றுள்ளது. இங்கு 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொதித்தது. இரண்டாம் இடம் ஒடிசா மாநிலத்துக்கு. 109 டிகிரி. தமிழ்நாட்டின் சேலம் 108 டிகிரி சூடாகி 3ம் இடத்தில் இருந்தது. இரண்டு நாள் முன்னதாக ஈரோடு மூன்றாம் இடத்தை பிடித்திருந்தது.

The post தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இன்றும் வெப்ப அலை வீசும்: இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: