இதில் நெல்லை புதிய பஸ்நிலையம், பாளை, சந்திப்பு பஸ்நிலையங்கள், நேரு சிறுவர் கலையரங்கம், வஉசி விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாளை வஉசி மைதானத்தில் ரூ.14 கோடி செலவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி ஏற்கனவே இருந்த பார்வையாளர்கள் அரங்கம், விளையாட்டு வீரர்கள் அறைகள் இடித்து அகற்றப்பட்டன.
இதைதொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன மேற்கூரைகள், இருக்கைகளுடன் கூடிய புதிய பார்வையாளர்கள் அரங்கம், வீரர்கள் தங்கும் அறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நடை பயிற்சி செல்ல நடைமேடை, சோலார் மின் விளக்குகள், 320 சதுரடியில் பிரமாண்ட மேடை, இரவிலும் விளையாட்டு போட்டிகளை கண்டுகளிக்கும் வகையில் நான்கு உயர் கோபுர மின் விளக்குகள், சிசிடிவி கேமிராக்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு மே 22ம் தேதி சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர் அரங்கத்தின் ஒரு பகுதியில் உள்ள மேற்கூரை சரிந்து விழுந்தது.
அப்போது அரங்கத்தில் பொதுமக்கள் இல்லாததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதைதொடர்ந்து சரிந்து விழுந்த பார்வையாளர்கள் அரங்கத்தின் மேற்கூரை சீரமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இதற்காக கம்பிகள் மூலம் சாரம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதன்பின் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெறும்.
The post பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில் சூறைக்காற்றில் சேதமான பார்வையாளர் மேற்கூரை சீரமைப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.