×

மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியர் நியமனங்கள் செல்லாது: கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க பள்ளிகளில் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்ட 25,753 பேர் நியமனம் செல்லாது என்று கூறி கொல்கத்தா உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்கள் இதுவரை பெற்ற சம்பள பணத்தை 12 சதவீத வட்டியுடன் திரும்ப ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேற்கு வங்க அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வு கடந்த 2016ல் நடந்தது. 24,640 காலி பணியிடங்களுக்கு 23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பின்னர் 25,753 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் தேர்வு விதிமுறைப்படி நடக்கவில்லை, முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி உட்பட 6 பேரை கைது செய்தது. கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேபாங்சு பசக் மற்றும் முகமது ஷபீர் ரஷீதி அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேபாங்சு பசக், முகமது ஷபீர் அமர்வு நேற்று அளித்த பரபரப்பு தீர்ப்பில், ‘‘ஆசிரியர்கள் தேர்வில் சட்ட விரோதமாக ஆட்சேர்ப்பு நடந்துள்ளது. பல முறைகேடுகள் நடந்துள்ளதால் அது செல்லாது. சட்டவிரோதமாக நியமனம் பெற்றவர்கள் இதுவரை பெற்ற சம்பள தொகை, இதர சலுகைகள் உள்ளிட்டவற்றை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் அரசுக்கு 4 வாரத்துக்குள் திரும்ப செலுத்த வேண்டும்’’ என கூறினர். மேலும், ஆசிரியர் நியமன முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சிபிஐக்கு உத்தரவிட்டனர்.

The post மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியர் நியமனங்கள் செல்லாது: கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Kolkata High Court ,Kolkata ,Dinakaran ,
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...