ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசியவர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம்: காவல்துறை அறிவிப்பு

ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசியவர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ஆந்திர மாநில காவல்துறை அறிவித்துள்ளது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 3 தினங்களுக்கு முன்பு விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது மர்ம நபரால் கல் வீசி தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஜெகன் மோகன் நெற்றியில் இடது புருவத்தின் மேலே சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக, ஜெகன் மோகனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஜெகன் மோகனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த எம்.எல்.ஏ. ஒருவரும் காயமடைந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள விஜயவாடா போலீசார், கல் வீசிய மர்ம நபரை பிடிப்பதற்காக 6 தனிப்படைகளை அமைத்துள்ளார். இதுகுறித்து விஜயவாடா கமிஷனர் நேற்று பேட்டி ஒன்றை அளித்தார். அதில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசியவர் குறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிப்படைக்கும் 10 பேர் கொண்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அங்குள்ள நபர்கள் தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்றார். இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசியவர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ஆந்திர மாநில காவல்துறை அறிவித்துள்ளது. 3 நாட்களாக முயன்றும், மர்ம நபரை பிடிக்க முடியாத நிலையில், ஆந்திர போலீஸ் சன்மானம் அறிவித்துள்ளது. தகவல் கொடுப்பவர் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் ஆந்திர போலீஸ் அறிவித்துள்ளது.

The post ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசியவர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: