சிவகங்கையில் பங்குனி உத்திர தேரோட்டம்

சிவகங்கை, மார்ச் 25: சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. ‘சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் விஸ்வநாத சுவாமி கோவிலில் எழுந்தருளி உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ம் திருநாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 9ம் திருநாளான நேற்று மாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது.

ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்று இரவு 7மணி அளவில் தேர் நிலைக்கு வந்தடைந்தது. தேர் நிலைக்கு வந்ததும் தேரின் மேலிருந்து பக்தர்களை நோக்கி வாழைப்பழங்கள் வீசப்பட்டன. இரவு புஷ்ப பல்லாக்கில் வள்ளி தெய்வானையுடன் முருகர் திருவீதி உலா வந்தார். 10ம் திருநாளான இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு மயில் வாகனத்தில் முருகன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

The post சிவகங்கையில் பங்குனி உத்திர தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: