பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

 

நாகப்பட்டினம், மார்ச்22: நாகப்பட்டினம் அருகே ஒக்கூரில் தனியார் அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு அரியலூரை சேர்ந்த நாகராஜ் மகன் ராஜா (21), ராமசாமி மகன் ஜெய்சங்கர் (36) ஆகியோர் வேலை செய்து வந்தனர். கடந்த 2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி வேலை முடிந்து ராஜா மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வெளியே வந்தனர். நாகூர் கங்களாஞ்சேரி நடப்பூர் பஸ் நிலையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில், லாரியின் டயரில் சிக்கி ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜெய்சங்கர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இதுகுறித்து நாகூர் போலீசார், லாரி டிரைவரான பாபநாசம், பசுபதிகோவிலை சேர்ந்த ஹானஸ்ட் ராஜ் (28) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு நாகப்பட்டினம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் லாரி டிரைவர் ஹானஸ்ட்ராஜ்க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: